'உள்நாட்டுப்போரை நிறுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது'- டேவிட் மிலிபாண்ட்
இலங்கையில் கடந்த 26 வருடங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை நிறுத்த வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் புதன்கிழமை தனது ஒரு நாள் இலங்கை விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாமவின் முன்னிலையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள டேவிட் மிலிபாண்ட் அவர்கள், பேருந்துகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவை பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானதால் இலங்கை பெருமளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தது. அவ்வாறான துக்ககரமான சம்பவங்களின் போது இலங்கையுடன் பிரிட்டன் இணைந்து நின்றுள்ளது என்று தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பற்ற அங்கு போர் நிறுத்தம் கோரப்படவில்லை என்றும் டேவிட் மிலிபாண்ட் கூறினார்.
பொதுமக்களின் தேவைகளை கருதியும், நீண்ட கால சமாதானததுக்கான தேவை மேலோங்கியுள்ள நிலையிலுமே இந்த கோரிக்கை விடுக்கப்படுகிறது.
என்றும் கருத்து வெளியிட்டார் டேவிட் மிலிபாண்ட்
பொதுமக்களின் கவலைகளை வெளிப்படுத்தவும், போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறியுள்ள மக்களின் தேவைகளை மனதில் கொண்டே தானும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்ணர் அவர்களும் இலங்கைக்கான கூட்டு விஜயத்தை மேற்கொண்டதாகவும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு கனரக ஆயுதங்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது என்கிற அரசின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
தனது பயணத்தின் போது ஐக்கிய நாடுகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் மற்றும் எதிர்கட்சியினர், அரச சாரா அமைப்புகளுடன், மோதல் பகுதி மற்றும் அங்கிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்கு வந்துள்ள பொதுமக்களின் பெருமளவிலான தேவைகளை எவ்வாறு இணைந்து நிறைவேற்றுவது என்பது குறித்தும் விவாதித்தார்.
தாமும் டேவிட் மிலிபாண்டும் போர் நடக்கும் பகுதிகளுக்கு மேலும் பலர் சென்று வரும் தேவையினை வலியுறுத்தியதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்டு குஷ்ணர் தெரிவித்தார்.
எனினும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சரின் கருத்துக்களில் இருந்து இந்த அனுமதி அளிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் பெர்ணார்ட் குஷ்ணர் கூறினார்.
No comments:
Post a Comment