1986ல் ஜேர்மானிய நகரமொன்றில் வெளியாகிய "தீ " என்னும் கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகளை அகதிகளின் நாட்குறிப்பு வரும் நாட்களில் சுமந்து வரும். தசாப்தங்களைத் தாண்டியும் அகதிகளின் நிலை அப்படியே இன்றும் இருப்பதற்கு இக் கவிதை ஒரு சாட்சி.
அகதி !
கண்களில் ஏக்கம்!
கால்களில் தயக்கம் !!
நெஞ்சினில் தவிப்பு !!
கைகளில் வெறுமை !
என்ன திகைக்கின்றாய்?
இவன் பெயர் மனிதன் தான்.
ஏகாதிபத்தியக் கால்களினுள்ளே
சிறுத்துப் போனவை
இவனது கால்கள் !
முதலாளித்துவ முகங்களினுள்ளே
அழுது வீங்கிய
முகம் இவனது !
இறைச்சிக் கலோரிகள்
அவியும் தெருக்களில்
அரிசி அவியும்
பாத்திரம் இவனது !
மாதம் ஓர்முறை
வெல்வெயர் (welfare) எறியும்
எச்சில் சில்லறை...
அரைவயிற்றோடு - இவ்
அடிமையின் முறுவல்!
அழுக்குத் துணியோடு - ஓர்
அதிசய ஊர்வலம் !
இப்போது
சொல்லுங்கள்
இந்த மனிதனின் இரத்த அணுக்களை
எந்தக்கடையினில் விற்றுத் தருவீ ர் ?
வானமுயர்ந்த கட்டிடச் செறிவு !
வீதி நிறைந்த வாகன நெரிசல் !!
நாடே உருளும்
பணத்தின் சுவடுகள் !!
ஓ ! இந்த மனிதனின்
கண்களை வாங்கி - எந்த மனிதன்
காசு கொடுப்பீர் ?
வேலைக் கந்தோர்
இவனை விரட்டும் !
பாடசாலைக் கதவுகள் மூடும் !!
வீதியில் கூட்டும்
கூலியில்க் கூடத்
தோல்களில் பேதம் !!
நிறங்கள் புரியா - எந்த மனிதா
இவனின் தோலை உரித்துக் கொடுப்பாய் ??
குளிர்காலப் பின்னிரவு
(ஜெர்மனி-ரியர் 1985)
2 comments:
நல்ல கவிதை, அனுபவித்து எழுதியுள்ள கவிதை.
தொடருங்கள்
பாரதி
அகதிகளின் வாழ்வியலானது ஈழத்தமிழரின் வாழ்வியலாகிவிட்டது.வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அகதிகளின் நாட்குறிப்பிற்கு நன்றி.
Post a Comment