நான் பேயாகிய பெருங்கதை!!
தலை எரிந்து கொண்டிருக்கிறது.
கைகளும், கால்களும் எலும்புகளாகின.
சதைநார்கள் அழிந்து போயின.
நான் பேய்!!
எல்லாவற்றையும் அறிகிறதென் உணர்வு. குடும்பங்களையும்,குழந்தைகளையும்
தவிக்க விட்டுவிட்டுத் தனித்து வா என்று
கட்டளையிடுகின்றன மூத்த பேய்கள்!!
சந்தோசத்திற்கும், நித்தியத்திற்காகவும்
இரத்த முறிஞ்சு என்கின்றன......
குந்தியிருந்த பேய்கள்.
படைக்கப்பட்ட ஆன்மாக்களை
அப்படியே புசி என்கிறது.....
குறளிப்பேய்.
கூடாது பிணங்களை மட்டுமே உண் என்கிறது.....
பிடாரிப்பேய்
வானம் தீப்பந்துகளைப் பொழிகின்றது.
காற்று அனலாகிற்று.
குண்டுகளை நான் மகிழ்வோடு பந்தாடுகின்றேன் .
பெரிய பெரிய எறிகணைகளை அப்படியே விழுங்குகின்றேன்.
எரியுண்ட இடம் யாவும் உருத்தெரியாமல் போனது.
அங்கிருந்த ஆன்மாக்கள் பஸ்பமாயின.
ஆன்மாக்களும்,பிணங்களும்
பஸ்பமாகினால் நாளைக்கு நமது வயிற்றுக்கு....
ஏக்கப்பெரு மூச்சு விட்டது ஏதிலிப் பேய் .
எஞ்சியுள்ள ஆன்மாக்களை
அப்படியே விழுங்கி
அடிவயிற்றில் கட்டிக்கொள்
என்றது கொத்திப்பேய் .
சுடலைகளையும், பிணங்களையும்
எரித்தளித்துவிட்டதால் துக்கித்துப் போயிருந்தது
சுடலைகாத்த சுடலை மாடன்.
ஆன்மாக்களற்ற மண்ணில் இனிப் பேய்களெதற்கு.....
உட்காருகின்றேன் .......
பஞ்சு போலாகியது உடல்.
எழும்புகின்றேன் .
கால்கள் இறக்கை தரித்தன.........
நான் பறக்கத் தொடங்கினேன்!!!
1 comment:
பேய் யாரைப்பற்றி எதைப்பற்றி என்றெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
ஆனால் அது புரிகிறது.அது எது???
தேவிகா
Post a Comment