Sunday, December 20, 2009

இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

sunantha


பம்பலப்பிட்டி கடலில் சிறிலங்கா காவல்துறையினரால் அடித்து மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட பாலவர்மன் சிவகுமார் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ளது. அவரது படுகொலை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுனந்த தேசப்பிரிய எழுதிய பத்தி வருமாறு:-

பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

பாலவர்ணம் சிவகுமார் கொழும்பு இரத்மலான பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். ஊவாவில் பிறந்த அவரை பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் யுத்தம் நடைபெற்ற போது அடிக்கடி சோதனைகளைச் சந்தித்த போதிலும், அவர் எவ்வித இடையூறுகளும் இன்றி வாழ்ந்துவந்தார்.பாலவர்ணம் சிவகுமார் மனநோயினால் பாதிக்கப்பட்டவர், இதனால் அவர் அடிக்கடி, மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற நேர்ந்தது.

2006ம் ஆண்டு ஏற்பட்ட காதல் முறிவே இந்த மனநோய்க்கான காரணம் என அவரின் சகோதரர் தெரிவித்திருந்தார். அன்பு முறியும் அல்லது அன்பை இழக்க நேரிடும் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறான மனநிலைப் பாதிப்பை எதிர்நோக்கியிருப்போம். இவ்வாறான மனநிலையிலிருந்து முழுமையாக சுகமடையக் கூடிய சூழல் பாலவர்ணம் சிவகுமாருக்கு இல்லாமையானது மற்றுமொரு காரணமாகும்.

கடந்த இரண்டு வருட காலங்களுக்குள் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சமூக பாதிப்புக்கள் காரணமாக இருக்கக் கூடும். அவர் சுகமடைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி அவரது சுகவீனம் மீண்டும் அதிகரித்ததுடன், குழப்பம் விளைவிக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததன. 27ம் திகதி தனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னர் கடந்த 28ம் திகதி அவரது சடலம் கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரையோரத்தில் ஒதுக்கியிருந்தபோதே நாம் அவரை கண்டோம் என அவரது சகோதரர் தெரிவித்தார்.

காவல்துறை எவ்வாறு படுகொலை செய்தது?

அவர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய ரி.என்.எல், சிரச தொலைக்காட்சிகளுக்கு நன்றி பாராட்டும் வகையில் அந்தக் காட்சியை முழு நாடும் கண்டது. இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி உயிர்ப் பிச்சைக் கேட்டபோதும், அவர் பொல்லுகளால் தாக்கப்பட்டு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்தவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் காவல்துறையினரே.

'டெய்லி மிரர்' வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பாலவர்ணம் சிவகுமார் அன்றைய தினம் அதிகாலையிலிருந்தே பம்பலப்பிட்டி தொடரூந்து வீதிக்கருகிலிருந்து வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டிருந்துள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக தொடரூந்து ஓட்டுநர் ஒருவரும் படைச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அப்போது இவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பல மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவரது செயற்பாடுகளைத் தடுப்பதற்காக காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதுவரை அவரின் இந்த செயற்பாடுகளை பயங்கரமான செயற்பாடுகள் என எவரும் கருதவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது தமிழ் இளைஞர் என அருகிலுள்ள மக்கள் அறிந்துகொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காவல்துறையினர் சென்றதும் அவர் கடலில் குதித்தார். அதன் பின்னர் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கடலில் குதித்தனர். கூடியிருந்த மக்கள் நீண்ட இரண்டு பொல்லுகளை காவல்துறையினரிடம் கொடுத்தனர். துப்பாக்கியினால் சுடுமாறும் சத்தமிட்டனர். (பெரஹரவில் மதம் பிடிக்கும் யானையை சுட்டுக் கொல்லுமாறு மக்கள் கூச்சலிடுவதில்லை.)

பாலவர்ணம் சிவகுமார் கைகூப்பி வணங்கி தன்னைத் தாக்க வேண்டாம் எனக் கூறும்போது மக்கள் கொடுத்த பொல்லுகளினால் காவல்துறையினர் தொடர்ந்தும் தாக்கினர். கூடியிருந்த மக்கள் சண்டைக் காட்சி அடங்கிய சினிமாவைப் பார்ப்பது போன்று கண்சிமிட்டாது இந்த வீர நிகழ்வைக் கண்டுகளித்தனர். பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கி இறுதி மூச்சை விட்ட பின்னர் கருணையுள்ளம் கொண்ட கடல் அலைகள் குடும்பத்தினருக்கு இறுதிக் கிரியைகளை நடத்துவதற்காக பாலவர்ணம் என்ற தமிழரின் சடலத்தை மறுநாள் கரையொதுக்கியது.

எனக்கு நடந்த அனுபவம்

26 வயதான பாலவர்ணம் சிவகுமார் 1983 அல்லது 1984 ஆண்டு பிறந்திருப்பார். அவர் 1983ம் ஆண்டு பிறந்திருப்பாரானால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்டிருக்கமாட்டார். காரணம் தமிழ் மக்கள் கொரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது 1983ம் ஆண்டாகும். கறுப்பு வெள்ளியென பிற்காலத்தில் கூறப்பட்ட 1983ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி நாம் இருவர் கால் நடையாக கோட்டையிலிருந்து பொரல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். கொழும்பிற்கு புலிகள் வந்திருப்பதாக கதைகள் பரவியதை அடுத்து ஏற்பட்ட அச்சத்தில் வாகனங்கள் ஒன்றேனும் கிடைக்காத நிலையிலேயே நாங்கள் நடந்துசென்று கொண்டிருந்தோம். இந்தக் கதையின் பாதகமான முடிவாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டனர். புஞ்சி பொரல்லைப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டதுடன் சிலர் கைகட்டி, சிலர் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது அமைதியாக இருந்தனர்.

பொல்லுகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிவகுமாரைப் பார்த்தபோது அந்த புஞ்சி பொரல்லைச் சந்தியில் இடம்பெற்ற சம்பவமே எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி கடலோரத்தில் இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான தலைவிதி, பாலவர்ணம் சிவகுமார் சிங்களவராக இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா? அப்படி இருந்திருக்கவும் கூடும் அல்லது அவ்வாறு இல்லாதிருந்திருக்கவும் கூடும்.

அங்குலானவில் நடந்தது என்ன?

கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி இரவில் இரத்மலான அங்குலான காவல்துறையினரால் தினேஷ் தரங்க, தனுஷ்க உதய என்ற சிங்கள இளைஞர்கள் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி, இதற்கு ஈடான மனித படுகொலைகளாகும். தமக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக கரையோரப் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே அந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரையோரத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களின் பந்து இந்தப் பெண்ணின் வீட்டிற்குள் விழுந்ததே இந்தச் சிக்கலுக்கான அடிப்படையெனக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து இளைஞர்களைத் தேடுவதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற காவல்துறை அதிகாரிகள் இந்த இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர்.

இரவு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதன்பின்னர், ஆத்திரமடைந்த அங்குலான பிரதேச மக்கள் காவல்துறை நிலையத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். இந்தக் காட்சிகள் ஒளிப்படங்களாக பிரசாரப்படுத்தப்பட்டது.

பாரியளவில் மரணச் சடங்குகள் இடம்பெற்றன. பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கங்களை எழுதின. காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டதுடன் முழு காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேற்குறிப்பிட்ட பெண் மற்றுமொரு குற்றச்செயலுக்காக கைதுசெய்யப்பட்டார்.

இந்த இளைஞர்களின் மரணத்தில் கவலையடைந்த அதிமேதகு ஜனாதிபதி அந்த இளைஞர்களின் பெற்றோர்களைத் தேற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அதனை முழு நாட்டிற்கும் வெளிக்காட்டினார். கொல்லப்பட்ட பிள்ளைகளுக்காக பெற்றோருக்குத் தலா 5 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கினார்.

எனினும், பாலவர்ணம் சிவகுமார் தொடர்பாக எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. ஆத்திரமும் ஏற்படவில்லை. பசில் ராஜபக்ச கொடுத்த 2 லட்சம் ரூபாவுடன் அவரது மரணம் அமைதியான மரணமாகியது. இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter