Wednesday, April 21, 2010

ஈழத்துப் படைப்புலகின் காவலன் திரு. பத்மநாப ஐயர்

டூட்டிங் முத்துமாரிஅம்மன் ஆலய முத்தமிழ் விழாவில்(10.04.2010) வாழும் போதே கௌரவிக்கப்பட்டார் திரு. பத்மநாப ஐயர் அவர்கள் என்கின்ற முல்லை அமுதனின் ஈழநேசனுக்கான இக்கட்டுரையை மீள்பிரசுரிப்பதில் அகதிகளின் நாட்குறிப்பு பெருமையுறுகிறது. .

வாழும் போதே கௌரவிப்பு!
ஈழத்து படைப்புலகின் நண்பன்:திரு.பத்மநாப ஐயர்
.

வாழும் போதே கௌரவிக்கிற நிகழ்விற்கு பொருத்தமானவர்களில் முதலிடத்தை பெறுபவர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள். ஈழத்து இலக்கிய உலகில் பன்முகப் பார்வை கொண்டவர். நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்து சக்தியாக விளங்குபவர். பதிப்பு, படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதின் திறமை, திசைகளெங்கும் வருகிற படைப்புகளில் தரமானவற்றை பலரையும் படிக்க வைப்பதிலும் முன் நிற்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெளியீட்டு துறையில், ஆக்கங்களை தொகுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவது நமக்கு கடவுள் தந்த கொடையாகும்.

28/08/1941 இல் பிறந்த பத்மநாப ஐயர் தீவிர இலக்கிய வாசகனாக இருப்பதால் தான் நல்ல இலக்கிய முயற்சிகளை கொணர்வதில்/ தேடுவதில் ஆர்வம் காட்டுகிறார் என உணர முடிகிறது. கூடவே இவருக்கு வாய்த்த கல்வி, வீட்டுச் சூழல், நண்பர்கள் இவரைச் சரியான திசையில் செல்ல வைத்தது. அ.யேசுராஜா, மு.நித்தியாந்தன், மு.புஷ்பராஜன், என்.கே.மகாலிங்கம், ஏ,ஜே.கனகரட்னா, சட்டநாதன், குப்பிளான்.ஐ.சண்முகம், கே.கணேஷ், செல்வா.கனகநாயகம், சு. வில்வரத்தினம், சசி.கிருஷ்னமூர்த்தி, மு.பொன்னம்பலம், சேரன் ,நிர்மலா,ரகுபதி, வ.ச.ஐ.ஜெயபாலன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, சுந்தரராமசாமி, நா.கண்ணன், 'கிரியா.ராமகிருஸ்னன், சி.மோகன் என விரிகிறது இவரின் நண்பர்கள் கூட்டம்.

டொமினிக் ஜீவா, கைலாசபதி, காவலூர் ஜெகநாதன் போன்றோரின் முயற்சியினால் ஒரு வழியாக நமது இலக்கியம் முன்னெடுக்கபட்ட சூழலில் முதன் முதலாக தென்னக இலக்கிய உலகில் நமது படைப்புகள் பற்றி பேச வைத்த பெருமை திரு.பத்மநாப ஐயரையே சாரும்.

அந்த நாட்களில் வெளி வந்த தீபம், கணையாழி, எழுத்து, கசடதபற, காலச்சுவடு, படிகள், புதியகலாசாரம் எனப் பல சிறு சஞ்சிகைகளை பலருக்கு அறிமுகபடுத்தியதுடன் அது போல சஞ்சிகைகளும் நம்முள் வர உந்து சக்தியாக இருந்தவர். புதுசு, அலை, சமர் குறிப்படதக்கவைகள். ஐயர் என்றாலே இலக்கிய உலகில் தெரியாதவர்கள் இல்லை எனலாம்.

முதன் முதலில் நூலக சுட்டெண்ணுடன் வெளி வந்த ஈழத்து தமிழ் நூல் வெளியீடு இவர் தொகுத்த அலை இதழ்களின் தொகுப்பே. அச்சிடலின் முன் மாதிரியான தொகுப்புக்களைக் கொண்டு வந்ததில் ஓவியர். மார்க்ஸ் அவர்களின்' தேடலும் படைப்புலகமும்'(1987) நூலாகும். தமிழ் நாட்டிலும் வந்ததில்லை எனச் சொல்வர். அந்த நாட்களிலேயே நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட நூலாகும். வடிவமைப்பில் புதுமுயற்சியாகவும் கருதப்பட்டது. மேலும் தரமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'மரணத்துள் வாழ்வோம்'(1985) எனும் தொகுப்பாக இன்றும் பேசப்படுகிற தொகுப்பாக்கித் தந்துள்ளார்.

ஐயர் என்றாலே அவரின் இலக்கிய முகமே நம் கண் முன் வந்து நிற்கிறது. ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு'(1985) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது. கவிதை என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சண்முகம் சிவலிங்கம். அவரின் 'நீர்வளையங்கள்'(1988) ஐம்பத்தெட்டுக் கவிதைகளைக் கொண்ட நூலாகும். சுந்தர ராமசாமி, கைலாசநாதக்குருக்கள் போன்றோர் மீது அபிமானம் கொண்டிருந்தவர்.

திருமதி.பத்மநாப ஐயரின் 'இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்'(1988) வெளியிட்டு இன்னொரு பரிமாணத்தினை படைப்பில்/வெளியீட்டில் காட்டி நின்றார். கா.கைலாசநாத குருக்களின் 'இந்து பண்பாடு:சில சிந்தனைகள்' நூலை 1986 இலும் 'சைவத் திருக்கோவிற் கிரியை நெறி' நூலை 2009 இலும் வெளிவரக் காரணமாக இருந்தவர். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பல இடங்களிலும் தந்தையுடனும், கல்வி, தொழில் நிமித்தம் பல இடங்களிலும் வசிக்க நேர்ந்ததில் பல இலக்கிய நேசிப்பாளர்களை நண்பர்களாக்கியும் கொண்டார். தெளிவத்தை.ஜோசெப், கே.கணேஸ் குறிப்பிடதக்கவர்கள்.

யாழ் நூலகம் எரியுண்ட போது அதன் மீள் எழுகைக்காக தன் பங்களிப்பை அன்றே வழங்கியவர். பின் நாளில் வெளி வந்த நூலகம் பற்றிய (Burnning memories)- விவரண சித்திரத்தின் பின் ஒத்துழைப்பை வழங்கியவர்களில் இவரும் ஒருவர். தர்மசிறி பண்டாரநாயக்காவின் சின்னத்திரைப்பட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் இன்னொரு பரிமாணதிற்கான ஒத்துழைப்பையும் வழங்கி ஈழத்து இலக்கிய பரம்பலுக்கான படிகளை திறந்து விட்டார்.

இதே போலவே ரஷ்ஷிய சுயசரிதை(...) நூலை நண்பர் ஊடாக சிங்களத்தில் வெளியிட உதவினார். 21/10/2007 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த காந்தி மக்கின்ரயரின் நாடகத்தை லண்டனில் மேடையேற்ற நண்பர்களுடன் உதவியாக இருந்தார். எமது விடுதலை போராட்டத்தின் மீதான அக்கறை அதிகம் நிரம்ப பெற்றவர். எனினும் போராடத்தின் பின்னடைவின் மீது விமர்சனத்துடன் கூடிய வருத்தமும் உண்டு.

விடுதலை போராட்ட நெருக்கடி காலத்தில் கூட அதீத அக்கறை காட்டி பயங்கரம் மிகுந்த கடல் வழிப் பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் ரகுபதி(Early Settlements in Jaffna), யேசுராசா(தொலைவும் இருப்பும் ஏனய கதைகளும் ,அறியப்படாதவர் நினைவாக) போன்றோரின் நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர்.

மயிலங்கூடலூர்.பி.நடராஜனின் நட்புக்கு பாத்திரமாய் இருப்பவர். நூலகக் கனவின் ஒரு படியாகவே ஈழத்து நூல்களை 'மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான எமது நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டதின் படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்தவர். பல நூல்களை யாரும் பார்க்கலாம்.

தங்களின் நூல்களை மின்னம்பலத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தங்கள் நூல்களை அல்லது நூற்பதிப்பின் குறுந் தகடுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பதிப்பாளர்களிமிருந்தும் எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாதது. 1965 இல் லக்ஷ்மி வாசகர்வட்டம் மூலம் வெளியிட்ட 'அக்கரை இலக்கியம். இவருள் ஏற்படுத்திய தாக்கமே இன்று வரை நல்ல வாசகனாகவும், தரமான நூல்கள் வருவதில் பெருவிருப்பு கொண்டவராகவும் பவனி வருகிறார்.

இசை மீதான அதீத ஈடுபாடு கொண்டதின் வெளிப்பாடே மணக்கால் ரங்கராஜனின் லண்டனில் நடாத்திய இசை நிகழ்வும் தான் விரும்பும் இசையை ந ண்பர்களும் கேட்க வைப்பதில் அவருடன் பழகியவர்க்குத் தெரிந்திருக்கும். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தொடங்கி அனைத்து கர்நாடக இசை கலைஞர்களை நேசத்துடன் வரவேற்பதுடன் அவர்களின் இசையை நண்பர்கள் மூலம் பரப்புவதிலும் முன் நிற்கிறார். தரமுள்ள ஏழை எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் கைதூக்கி விடவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி செயல்படுத்தியும் உள்ளார்.

பாரதி , சி.வி.இராமன் போன்றோரின் விவரணச் சித்திரத்தை நமக்கெல்லாம் தந்துதவியவர். ஈஸ்ட்காம் தமிழர் நலன்புரிச் சங்கத்தில் கடமை புரிந்த காலத்தில் அதன் ஊடாக பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ்(1996), கிழக்கும் மேற்கும்(1997), இன்னுமொரு காலடி(1998) ,யுகம் மாறும்(1999) ,கண்ணில் தெரியுது வானம்(2001) வெளியிட்டதன் மூலம் இலக்கியத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகுக்கு காட்டியவர் எனலாம்.

கனடாவிலிருந்து வெளிவரும் 'காலம் ' சஞ்சிகை வெளியிட்ட சுந்தரராமசாமி, ஏ,ஜே.கனகரட்னா .கே.கணேஷ் சிறப்பிதழ்களுக்கு ஒத்தாசையாக இருந்தவர். இவர் வெளியிட்டவற்றில் 'அக்கரைக்கு போன அம்மாவுக்கு'(1985), யுகங்கள் கணக்கல்ல(1986) , பெண்களின் சுவடுகளில்..(1989), யதார்த்தமும் ஆத்மார்த்தமும்(1991), மீண்டும் வரும் நாட்கள்(2004), வர்ணங்கள் கரைந்த வெளி'(2004) AJ:The Rooted Cosmopolitan (Articlesby AJ) (2008), சுழலும் தமிழ் உலகம் (2008) , ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் (2008), தேடலும் விமர்சனங்களும்...(2009), முடிந்து போன தசையாடல் பற்றிய கதை(2009) என்பனவற்றுடன் இன்னும் அச்சில் வர விருப்பவைகள் தமிழியல் வெளியீடாகும். வெளியீட்டு முயற்சியின் மைல் கல்.

ஏ.ஜே.கனகரட்னாவின் நூலுக்கான வெளியீட்டுக்கான முழு ஒத்துழைப்பும் இவருடையதே. இதே போல் தான் தன் கஷ்டம் பாராது பலருக்கு உதவுவதில் மற்றவர்க்கு தெரியாமலேயே செய்வதை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் நந்தினி சேவியர் கூட ஒரு முறை தன் இதய சிகிச்சைக்கு ஐயர் உதவியதை சொன்னார்.

இவர் எத்தனை லட்சத்திற்கு அதிபதி என்று கேட்டால் அவரின் கடன் பட்டியல் தெரிய வரும். அதுவும் புத்தகத்திற்காக/ எழுத்தாளர்களுக்காகச் செலவு செய்திருப்பதும் அறிய வரும். வீடு முழுக்க இறைந்து கிடக்கும் நூல்கள் இவரின் தேடலுக்கான பதிலாகும். மனித நேயம் அங்கு உணரப்படும் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும், பண்டாரவளை அர்ச்.சூசையப்பர் கல்லூரியிலும், பேராதனைப் பல்கலைக் கழக பௌதீக விஞ்ஞான பட்டதாரியான இவர் இரத்தினஐயர் யோகாம்பாள் தம்பதிகளின் புதல்வராவார்.

சஞ்சிகையில் தனக்கென தனி இடத்தை பெற்ற அலை வெளியீடாக'மார்க்ஸியமும் இலக்கியமும்:சில நோக்குகள்(1981), ஒரு கோடை விடுமுறை(19810, தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்(1983),அகங்களும் முகங்களும்(1985)இவரின் பங்களிப்பை பேச வைத்த நூல்களாகும். அலைகளின் பிரதிகளை ஒரே தொகுப்பாக்கி முதன் முதலில் வெளியிட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின்பே பிற சஞ்சிகைகள் தங்களின் இதழை தொகுப்பாக்கினர்..

பத்மநாப ஐயரின் தூண்டுதலினால் அக்கரை இலக்கியம்(1968), விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்(1981), போர்க்குரல்(1981), வடமொழி இலக்கிய வரலாறு(1981)அழியா நிழல்கள்(1982 )தியானம்(1982) ,மழை வரும் நாட்கள்(1983), இரண்டாவது சூரிய உதயம்(1983) ,சாதாரணங்களும் அசாரணங்களும்(1983), நதிக்கரை மூங்கில்(1983) மகாகவி கவிதைகள்(1984) ,பதினொரு ஈழத்து கவிஞர்கள்(1984) முற்போக்கு இலக்கியம்(19840) ,அறியப்படாதவர் நினைவாக(1984), ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி(1984), புது யுகம் பிறக்கிறது(1984), போர்ப்பறை(1984) மெய்யுள்(1984) ,கலைஞனின் தேடல்(1984), ஒரு தனி வீடு(1984) ,இந்து சமுத்திர பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்(1987) தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்(1989), வீடற்றவன்(... )மத்து(2000), செங்காவலர் தலைவர் யேசுநாதர்(2000),கிருஷ்ணகானம்1,2(2000) நூல்களின் வருகை ஐயரின் பரிமாண வளர்ச்சி திசை எங்கும் பேசப்பட்டு வருகிறது. அவர் ஒரு பல்கலைக் கழகம் தான். 2004 இல் கனடா இலக்கிய தோட்டமும் டொரொண்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கிய 'இயல்'விருது இவருக்கு வழங்கிய அதி உயர் விருதாகும்.

வடமொழி இலக்கிய வரலாறு போன்ற கைலாசநாதகுருக்களின் நூல்களை மறு பிரசுரம் செய்து தமிழகம் உள்ளிட்ட தமிழர் வாழும் பிரதேசங்களில் கொண்டு செல்லும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

நகைச்சுவை நிரம்பியவராக இருப்பினும் தீவிர பதிப்பாளராவே தென்படுகிறார். இலக்கிய உலகம் இவருக்கு நிறையவே கடமைப் பட்டிருக்கிறது. இவரை 'வெளிக்கள நூலகர்' என மௌனகுருவும் ,'தமிழ்த்தூது' என எம்.ஏ.நுஹ்மானும் சொல்வது உண்மை தான். காலம் சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட்டு பெருமை தந்தது. பொ.ஐங்கரநேசன் இவரை நேர்காணல் கண்டு தினக்குரலில் பிரசுரித்தும் , அதை தன் நூலில் இணைத்துக் கொண்டுள்ளார்.

வாழும் போதே கௌரவிக்கப் படவேண்டியவர். எனினும் நல்ல மனம் படைத்தவர்கள் வாசகராக இணைந்து இவரை பலப் படுத்த வேண்டும் .அதுவே சிறந்த கௌரவமாகும். இவர் பட்டங்களை நாடிச் சென்றவர் இல்லை.

தமிழ் மெல்லச் சாகும் என்கிற கவலை நம்மை போலவே இவருக்கும் உண்டு. இவரின் களமுனையில் இணைவதன் மூலம் இந்த நடமாடும் நூலகம் புதுப் பரிமாணத்துடன் கூடிய இலக்கிய வளர்ச்சிக்கு உதவமுடியும்.



வாழ்த்துக்கள் .
பத்மநாப ஐயரின் பணி பெரியது. வாழ்த்துக்கள்.ரமணி

8 புதன்கிழமை, 14 ஏப்ரல் 2010 03:20

bala ramalingam (thirumalai bala)
திரு பத்மநாபா ஐயருக்கு வணக்கம் '
தங்களது பதிப்பியல்தொடர்பான தமிழ்ப் பணிக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .ஈழநேசன் சஞ்சிகையில்
உலகளாவிய ரீதியில் பல முன்னணி எழுத்தாளர்கள்
தங்களது ஆளுமைக்கு தருகின்ற வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும் அறிந்து இன்னும் பல்லாண்டுகள்
நலத்துடன் வாழ்ந்து தமிழ்த தாய்க்கு மேலும் மேலும்
தமிழ்ப்பணி ஆற்றிடவேண்டும் .
என்றும் பிரியமுடன்
பாலா ராமலிங்கம்
(திருமலை பாலா)

ஐயர் என்கின்ற ஆளுமை


திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2010 20:27

இளயை அப்துல்லாஹ்
மிகவும் மனம் மகிழ்வுறுகிறேன். செத்த பின்பு நினைவு அஞ்சலிக்கு செலவளிப்பதை விட உண்மையில் வாழும்போதுதான் ஒருவரை வாழ்த்தவேண்டும். இங்கு எமது சமூகத்தில் இந்தப்பழக்கத்த அதிகரிக்க வேண்டும். ஐயர் ஏனயை எழுத்தாளர்கள் மீது மிகவும் ஆதரவு காட்டுகின்ற ஒரு மனிதர்.
அவர் ஒரு சிறந்த பதிப்பாளர். நல்ல மனிதர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது சேவையை பாராட்டுகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
வருடா வருடம் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவரை இங்கு கூப்பிட்டு அவர்களை கெளரவிக்கும் ஒரு திட்டத்தை ஐயர் வைத்திருந்தார்.
இங்குள்ள எழுத்தாளர்களிடம் இருந்து மாதா மாதம் 20 பவுண் வீதம் பெற்று அதனை ஒரு அறக்கட்டளையாக நடத்தி இந்த திட்டத்தை சாதிக்கலாம் என்று அவர் நினைத்திருந்தார்.
2003 அல்லது 2004 என்று நினைக்கிறேன். நானும் அவரது இந்த திட்டத்தை மகிழ்ந்து மாதா மாதம் பணம் கொடுத்தேன். அவரால் இதனை தொடர முடியாது போயிருக்கிறது. புரவலர்கள் அவரின் இந்த திட்டத்தை 2010 இல் மீண்டும் அவரோடு சேர்ந்து செய்தால் அவருக்கு மிகவும் விருப்பமாக இருக்கும்.
இலங்கையில் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகவும் பிரயோசனமாகவும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
வருடம் 1000 பவுண் செலவிடுகின்ற அளவுக்கு பல புரவலர்கள் லண்டனில் இருக்கிறார்கள். ஏன் இதனை முத்துமாரி அம்மன் கோவில்காரரே செய்யலாம். தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் சேவையாக அதனை மனங்கொள்ளலாம். இந்த விருதோடு ஐயரின் கனவையும் முத்தமிழ் மன்றம் நிறைவேற்றினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.


மதிப்பிற்குரிய மனிதர்


சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2010 07:26

முருகபூபதி - அமைப்பாளர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
எனது நீண்ட கால நண்பர் பத்மநாப ஐயர் அவர்களை பாராட்டி கெளரவிக்க முன்வந்துள்ள அன்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றேன். பத்மநாப ஐயர் முல்லை அமுதன் குறிப்பிட்டுள்ளதைப்போன்று தனது வாழ்நாளையே தமிழ் இலக்கியத்திற்காக சமர்ப்பித்திருப்பவர். தன்னைச்சுற்றியிருக்கும் கலை இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் இனம்கண்டு தமிழ் படைப்புலகத்துக்கு அறிமுகப்படுத்திவருபவர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளற்ற இயல்புகொண்டவராலேயே இது சாத்தியம். அவர் நல்லாரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்

திரு. பத்மநாப ஐயர் நவீன ஈழ இலக்கிய வளர்ச்சியின் வேர் வெள்ளிக்கிழமை, 09 ஏப்ரல் 2010 18:44


சந்திரலேகா வாமதேவா
எனது தந்தை திரு இலங்கையர்கோனின் வெள்ளiப்பாதசரம் என்ற கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்ட லுஉதஸெஒநங aநட லாமநெத என் நூலை எனக்குத் தருவதற்காக திரு பத்மநாதஐயர் என்னுடன் தொலைபேசி Y%யகஇ நஜஹுலHடீ ந்ஹுழஇலஹுH. அன்றிலிருந்து அதாவது 2003 ஆம் ஆண்டிலிருந்து அவரை நான் தொலைபேசி மூலம் அறிவேன். அவரை நான் நேரே காணாவிடினும் அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்துத் தொலைபேசி மூலமாவது பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் ஒரு பேறாகவே கருதுகிறேன். அவரிடமிருந்து பெரும்பாலான நூல்கள் பற்றிய விபரங்களை மட்டுமல்ல பல்வேறு இலக்கியவாதிகள் பற்றியும் அறிந்து கொண்டேன். நான் கட்டுரைகள் எழுதுவது குறித்து அறிந்து கொண்ட ஐயர் அவற்றை இணையத்தில் போடவேண்டும் என்று விரும்பி அதற்கான ஏற்பாடுகளை மதி கந்தசாமி மூலம் செய்து தந்தார். ஏறக்குறைய 40 கட்டுரைகளை அதில் போட்டேன். பின்னர் அவற்றை நூலாக்கினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது மட்டுமல்ல நூலாக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து எனது சுழலும் தமிழ் உலகம் என்ற நூலை காலச்சுவடு பதிப்பகத்தில் அச்சிடச் செய்து அவற்றின் பிரதிகளையும் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த நன்றிக்கடனை நான் தீர்ப்பதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி போதாது. அதுமட்டுமல்ல எனக்கு மிகழ் சிறந்த, பயனுள்ள நூல்களை எனக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார். அதற்கும் நான் என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இலக்கியமும் நாட்டுப்பற்றும் திரு ஐயர் அவர்களது குருதியில் ஊறிச் செறிந்திருக்கிறது. உலகம் முழுவதும் பல இலக்கியவாதிகளுடன் அவருக்குத் தொடர்பிருக்கிறது. அவரது வீடு புத்தகங்களால் நிறைந்திருக்கிறது. அதனால் அவர் வீட்டிலிருந்தே உலகம் முழுதும் நடமாடும் ஒரு நூலகமாக இருக்கிறார். எந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் அவர் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த எல்லாத் தகுதிகளுக்கும் அப்பால் அவர் இரக்க குணம் நிறைந்த ஒரு நல்ல மனிதர்.

தமிழ் உலகிற்குப் பெருமை


வியாழக்கிழமை, 08 ஏப்ரல் 2010 22:02

பாடும்மீன் சு.சிறீகந்தராசா
தமிழ்மொழிக்குத் தன்னிகரற்ற பணிபுரிந்துகொண்டிருக்கும் உயர்திரு. பத்மநாப ஐயர் அவர்களைப் பாராட்டுவது தமிழ் உலகிற்கே பெருமைதருகின்றதொரு விடயமாகும். அவரது தமிழ்ப்பணி அளவிடற்கரியது. பரந்துபட்டது. அவரை நான் கண்டதில்லை. உரையாடியதில்லை. ஆனால் எனது ஆசிரியர் மயிலங்கூடலுார் பி. நடராசன் அவர்கள் ஐயர் அவர்களது நண்பர் என்பதை அறியும்போது ஏதோ ஒருவித நெருக்க உணர்வு இதயத்தில் எழுகின்றது. ஐயர் அவர்களைப் பாராட்டும் பணியில் அனைத்துலகத் தமிழ் ஆய்வுமன்றம் - அவுஸ்திரேலியாவும் இணைந்துகொள்வதில் பெருமையடைகின்றது. சு.சிறீகந்தராசா - பொதுச்செயலாளர் - அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் - அவுஸ்திரேலியா

பழகுதற்கினிய ‘பைந்தமிழ்' நேசர்!


வியாழக்கிழமை, 08 ஏப்ரல் 2010 17:27

'சர்வசித்தன்'
திரு பத்மநாப ஐயரை, எழுபதுகளில் (!972 முதல் 1979 வரையான காலப் பகுதியில்) சந்தித்து உரையாடியிருக்கிறேன்.அப்போது, நான் கொழும்பில் கட்டிடத்திணைக்களத்திலோ அன்றி நீர்ப் பாசனத் திணைக்களத்திலோ அவரைப் பார்த்ததாக ஞாபகம்.சரியாக நினைவில்லை!
என்றாலும்,அப்போதே அவரது அமைதியும்,பிறர்மீது அவர் காட்டும் பரிவும் பிரசித்தம்.
அண்மைக் காலங்களில் அவர் ஈழத்து தமிழ் நூல்களை மின்னேற்றும் சாதனையைப் புரிந்து கொண்டிருக்கும் ‘நூலகம்' திட்டத்தின் தாங்கு சக்தியாக விளங்குவதை அத்திட்டம் மூலம் பயன் பெற்றுவரும் யாவரும் அறிவர்.
தமிழ் உள்ளவரை, தமிழ் நூல்கள் வாழும்வரை அவரது பெயரும், பணியும் நினைவில் நிற்கும்.
அவர் பெற்ற கௌரவம் தமிழர்களுக்குக் கிடைத்த கௌரவமாகும்.வளர்க அவரது நற் தொண்டு.

ஈழத்து இலக்கியத்தை பேணிய "பிதாமகன்"


மதிப்பிற்குரிய பத்மநாப ஐயர்

வியாழக்கிழமை, 08 ஏப்ரல் 2010 15:06

மாசித்திவினாயகம்
ஈழத்து இலக்கியத்தின் "பிதாமகன்" என்று வர்ணிக்கத்தக்க வகையில், காலஓட்டத்தோடு வழக்கொழிந்து போகும் தறுவாயில் இருந்த அரிய தமிழ் நூல்களைப் பேணி இன்றைக்கும் அவற்றைப் பேச வைத்திருக்கின்ற பாரிய பணி மதிப்பிற்குரிய பத்மநாப ஐயர் அவர்களுடையது. வாசகனாக இருந்து வாசித்தவற்றைப் பேணுகிற, அவற்றைத் தொகுத்துப் பாதுகாக்கின்ற,தன்னலமற்ற மிகப் பெரிய உளத்தூய்மையாளர்கள் இவ் உலகத்தில் வெகு சிலரே. அவர்களுள் ஐயர் அவர்கள் முதன்மையானவர் என்று துணிந்து கூறலாம். ஐயர் அவர்களை அவர் வாழும் காலத்திலேயே கௌரவிக்கின்ற தமிழ் நெஞ்சங்கள் வாழ்க. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக தமிழகத்திலிருந்து புத்தகங்களைப் பெற்றுவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தமிழகத்திலிருந்து தனியே புத்தகப் பொதிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்துசேர்த்த பத்மநாப ஐயரின் உழைப்பு அரியது.என்கின்ற நித்தியானந்தம் அவர்களின் வாக்குமூலத்தை இவ்வேளை நான் இங்கு நினைவுகூருகின்றேன்.
மா.சித்திவினாயகம்.

1 comment:

Anonymous said...

பத்மநாப ஐயரின் பணி பெரியது. வாழ்த்துக்கள்.
ரமணி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter