Sunday, April 25, 2010

நாடுகடந்த தமிழீழ அரசும், நமச்சல் எடுக்கும்கனவான்களும்...


புதிய புதிய செப்படிவித்தைகள்:
நாடுகடந்த தமிழீழ அரசும், நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

என்னைப்பிடி, உன்னைப்பிடி என்று உலகளாவிய ரீதியில் 135 உறுப்பினர்களைத் தெரிவதற்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று வாக்குப்போடுபவர்களுக்கு காதில் பூச்சுற்றிவிட்டு கடைகள், வீதியோரங்கள், குந்துமிடங்கள், மரப்பாலங்கள் என்று எனக்கே வாக்குப்போடுங்கள், என்னையே ஆதரியுங்கள் என்று கர்ச்சித்துத் திரிகின்றார்கள் வேட்பாளப் பிரபலங்கள்.காலத்திற்குக்காலம், நேரத்திற்கு நேரம் நிறம் மாறுவோராகத் தாங்கள் பிழைப்பதற்கான புதிய புதிய செப்படி வித்தைகளை நம்மவர்கள் மத்தியில் அவர்கள் உருவாக்கி வருகின்றார்கள்.
கடந்த 60 வருட காலமாக இந்த உலகத்துடனும், உள்ளூர் மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லரசுகளுடனும் தமிழரின் தன்னாட்சி,மற்றும் வாழிட உரிமைகள்தொடர்பான அரசியல் சாசனங்களை உள்ளடக்கிய மிகப்ப் பெரியசட்டக்கோவைகள் வல்லமைமிக்க சட்டவல்லுனர்கள்,மற்றும் துறைசார்வல்லுனர்களால் வாதங்களாக வைக்கப்பட்டது.அதன் தொடர்பில் அவர்கள் குத்திப்பேசினார்கள். மிக அரிய வசனங்களினால் ஆர்ப்பரித்தார்கள்.மிகப்பெரிய தமிழர்பலத்துடன் பிரதான எதிர்க்கட்சியாக இலங்கை அரசாங்கத்தின் பாரளுமன்றத்திலே அவர்கள் இருந்தார்கள் .அவர்களின் பேச்சுக்களால் வைக்கப்பட்ட அடிப்படை உரிமை வாதங்கள் தாயக தேசியக் கோட்பாடுகள் மற்றும் இறையாண்மைக் கோசங்களை வெளியுலகமும் உள்ளுலகமும் கண்டுகொள்ளாத, கண்டுகொள்ளவிரும்பாத நிலையில் அம்முதிர்தமிழ்அரசியல் வாதிகள் கடவுளால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்று கூறிய வேளையில் இளம் போராளிகள் விடுதலை வேட்கையில் முடுக்கிவிடப்படுகின்றனர். அவ்விளைஞர்கள் தன்னாட்சி உரிமை வேட்கைமூலம் தமிழர்களை ஒன்றிணைப்போம் என்று சொல்லிச் சொல்லியே பல பல கிளைகளாகப் பிரிந்தார்கள். இப்போது சொல்வதுபோலவே தமிழனிடம் ஒற்றுமையில்லை என்கின்ற கோசத்தை முன்வைத்து வலிமைப்பட்ட குழுக்கள் எளிமையான குழுக்களை அழிக்கத்தொடங்கின. இப்படித் துப்பாக்கிகள் பலதரப்பிலும் பேச முற்பட்ட வேளையில்த்தான் பயத்துடன், தங்கள் உயிர்காக்கப் புறப்பட்டவர்கள் பணமிருந்த புலம்பெயர்ந்தவர்கள். பணமில்லா மனிதர்கள் குழுக்களில் சேர்ந்தார்கள். மாறிமாறி அழித்த இந்த மர்மப் போராட்டத்தில் வலிமையாளர்கள் எஞ்சியிருந்தார்கள். இறுதியில் அவர்களை விஞ்சிய வலிமையாளர்கள் அவர்களைத் தாக்கிய போது அவர்களைக்காக்க எவரும் இருக்கவில்லை.
இப்படியாக எல்லோரும் ஏறி இளைத்த குதிரையில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் ஏறத்துடிகின்றார்கள். இதற்காகப் பெரும் பணச்செலவில் தேர்தல் வேலைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் எதைப்பேசுவார்கள்? எங்கே பேசுவார்கள்? எப்படிபேசுவார்கள்?? என்பதை அறிந்துகொள்ளாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத புலம் பெயர் தமிழர்கள் வழமைபோலவே நமக்கென்ன இப்போதெல்லாம் வாக்குச் சாவடிக்குப் பொவது ஓர் பொழுது போக்கு என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
தமிழனையும் தமிழர் கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்காத இறையாண்மையைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்கிற இக்கனவான்கள் வேட்டிசால்வைகளில்லாமல் கோட்டுச் சூட்டுடன் தங்களின் புகைபடங்களுக்குப் புள்ளடிகள் போடக் கேட்டிருக்கின்றார்கள். இதில் ஈழவேந்தன் வேட்டி சால்வையுடன் விதிவிலக்கு.
இதையும் ஒருக்கால் சும்மா செய்து பார்க்கலாமே என்கின்ற தமிழர்களின் முனகலில் பெரும் பணம் இதற்கு வீணாகிறது என்பதை யாரும் எண்ணத் தயாராகவில்லை. காம்புகளில் முடங்கியிருக்கும் எம்மவரின்தாகம் தணிக்க அப்பணம் பயன்பட்டாலும் தேவலை. ஆதங்கத்துடன் வாக்களிக்கப்போகும் தமிழர்களுக்கு இவர்கள் சொல்லப்போவது இதைத்தான்.
வீழ்ந்தாலும் எம்மீசையில் மண் ஒட்டவில்லை.


கீழே வருகிறது பலரினதும் பலசரக்கு.
இது பரிஸ் ஈழநாடு
விடுதலைப் புலிகளின் தலைவராக கே.பி. அவர்களே நியமிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ உருவாக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. மக்கள் பேரவைகளும் அவர்களது விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.
திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும், பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும், அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன.

இது பரிஸ் ஈழநாட்டுக்கு கருத்தெழுதிய தமிழ்ச்செல்வியின் கருத்து.
வட்டுக்கோட்டைத்தீர்மான வரலாறு சார்பான சில அவதானங்களையும், அனுமாங்களயும் பார்தால் ஒருகசப்பான உண்மை புலனாகும் .
இத்தீர்மானத்தை முன் மொழிந்தவர் தந்தை செல்வா , இத்தேர்தல் வைப்பவர்கள் தந்தை செல்வா நினவு நாளைக் கொண்டாடியது உண்டா.
ஈழத்தின் தந்தை அவர் அல்லவா, தந்தை புகழ் பேசுவதே துரோகமாகிவிடும் சிலருக்கு.
இத்தீர்மானத்தை வழி மொழிந்தவரகள் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம், யோகேஸ்வரன் ஆகியோர்கள் துரோகிகளென்று சுடப்பட்டார்கள். அமிர்தலிங்கம் படு கொலை செய்யப்பட்டார்.
வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் சிற்பிகள் எல்லாருமே துரோகிகளென்று அழிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் அவமதிக்கப் பட்டிருந்தார்கள.
தந்தை செல்வா அமிர்தலிங்கம் சிவசிதம்பரம், யோகேஸ்வரன் ஆகியேர் துரோகிகள் என்றால் உருத்திரகுமாரன், டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் துரோகிகளென்று பரப்பும் வதந்திகட்கு வரலாறு பதில் சொல்லும்.
மற்றவர்களை விமர்சிப்பதைவிடுத்து வேலைத்திட்டங்களை முன்வையுங்கள்
ஒற்றுமையாக இயங்குங்கள்.
தமிழ்ச்செல்வி


ஜேர்மன் தமிழ் எழுதாளர் சங்கத்தின் குரல்.:
தற்போது நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் பலர் போட்டியிட முன்வந்துள்ளனர். இதில் பலர் எங்கள் விடுதலைப் போராட்டத்தைப்பற்றி அறியாதவர்கள், அக்கறையில்லாதவர்கள், இலட்சிய உறுதியற்றவர்கள், பதவியாசை, புகழ் ஆசைக்காக அலைபவர்கள் போன்ற பலர் போட்டியிடுகின்றனர்.அவர்களை அறியத்தாருங்கள்.

இது பிரான்சில் இருந்து ஒலிகின்ற குரல்:
முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி முதல் தமிழீழ மக்கள் பேரவை (La Maison du Tamil Eelam) என்ற அமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை துவக்கியுள்ளோம்.அதனால் எமக்கே வாக்கிடுங்கள்.
தமிழர்களின் வினா - சட்டத்திற்குப்புறம்பாக விமானங்கள், கப்பல்கள், கனரக ஆயுதங்களை வைத்திருந்ததும், சட்டத்திற்குப்புறம்பாக மக்களுக்குத் தண்டனை வழங்கியதும் நாட்டின் சொத்துக்களை நாசமாக்கியதும், நாட்டின்தலைவர்களை கொலை செய்ததும், மற்றும் வெளிப்படையாக தங்களுக்கான யாப்பினை (உட்கட்டுமானம் வெளிக்கட்டுமானம்) ஜனநாயகரீதியில் மேற்கொள்ளாமை, நாட்டின் இறைமைக்கு மாறாக தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டமை… இவைபோன்ற அனைத்தும் இறையாண்மையுள்ள அமைப்பின் செயற்பாடா!!! -
- முழுஉலகமுமே தீவிரவாதத்தை ஒழித்தது இலங்கை அரசு என்று பாராட்டுகின்றதோடு, தத்தம் நாட்டில் இருக்கும் போராட்ட அமைப்புக்களையும் முடிவுக்குக்கொண்டுவர கங்கணம் கட்டுவதற்கு தயாராகியுள்ளது… (22-08-2009ல் நைஜேரியாவில் போராட்ட அமைப்பு ஆயதங்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது) மக்கள் அழிக்கப்பட்டது உண்மையே! அம்மக்கள் அழிவிற்கு புலிகள் மக்களை கேடயமாகப்பயன்படுத்தியதன் காரணத்தாலே அவ்வழிவு ஏற்பட்டது என்று அனைத்து அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. அழிக்கப்பட்ட மக்கள் மக்களாகக்கருதப்படாமல் புலிகளாகவே கருதப்படுகின்றமை இன்னொரு வகை, அதாவது, இராணுவம் காலக்கேடுகொடுத்தும் மக்களை அரசகட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்காததும் புலிகளின் தவறாக பல மக்கள்மத்தியிலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. கிட்லரிக் காலத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகின்றேன்… கிட்லர் போரினை நடாத்தும் போது போராளியாக நடாத்தவில்லை இறைமையுள்ள நாட்டின் பெயரிலே நடாத்தியதும் மேலும் உள்ளாட்டில்மட்டுமல்ல வெளிநாடுகளுடனும் போரின்மூலம் அழிவினை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல் புலிகளின் ஆதிக்கம் போராட்டஅமைப்பாக இல்லாது, அரசின் ஆதிக்கத்தில் பங்காளராக இப்போர் ஏற்பட்டிருந்தால் இதன்பாதிப்பு உலக நாடுகளுக்குப் புரிந்திருக்கும். நீதியும் கிடைத்திருக்கும்.

இது கனடாவில் இருந்து ஒலிக்கின்ற குரல்:
ஏறக்குறைய 35 ஆண்டுகளாக முடி சூடா மன்னராக இருந்து தனது பங்களிப்பை முழுமையாகச் செய்துவிட்டு 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “இனிமேல் இந்தப் போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்களின் கையில் கொடுக்கின்றேன். அவர்கள்தான் இனிமேல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உறுதியாகக் கூறி எம்மிடம் ஒப்படைத்தார். அதை நாம் நமது பணிகளில் மிக முக்கியமானதாக கருதி நாம் எல்லோரும் சேர்ந்து இயங்கி வெற்றி பெறவேண்டும”
பெயரிலி குரல்:
அதனால் தான் பிரபாகரனைக் கைவிட்டுவிட்டு நீங்களே தமிழீழ அரசு என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள்ளீர்களா??
உருத்திரகுமாரனின் பதில்கள்.
1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கரு.
தமது தாயகத்தில் தமிழீழ மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளினையும் உணர்வுகளினையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்போது எந்தவித வாய்ப்புக்களும் இல்லை.
இலங்கை அரசு சட்டரீதியான தடைகளுக்கு ஊடாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகவும் படுகொலைகளுக்கு ஊடாகவும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினையும் உரிமைக் குரலினையும் ஒடுக்க முனைகின்றது.
இந்நிலையில் தமிழீழ தேசத்தின் அங்கமாகிய புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள ஜனநாயக வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் அதிஉயர் மக்கள் பீடமாக இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்படுகிறது.
தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குபெறுவது நடைமுறைச் சாத்தியம் இன்மையால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த அரசு தாயகத்தில் இருக்கும் நேச சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.
2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான அவசியம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது?
ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தினை தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் இணையாகவும் செழுமைப்படுத்துவதிலுமேயே அடங்கியுள்ளது.
இதனை சிறப்பாக அடைவதற்கும் அச்சுறுத்தல்களினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளினைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஒரு உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது. இது 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை தீர்மானமாக வடிவம்பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகள் இதற்கு மேலும் வலுச்சேர்த்தது.
இலங்கைத் தீவுக்குள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வளர்த்து எடுக்கப்பட்டு – இன்றைய நிலையில் கூர்மையடைந்துள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பும், பௌத்த சிங்கள மேலாதிக்க சமூகத்தினை சார்ந்த அரசியலமைப்பும் அதன் அடிப்படையான சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளினையும் நல்வாழ்வினையும் மறுத்துள்ளது.
இவை தமிழ் மக்களினதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய இனங்களினதும் அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைகளாக விளங்குகின்றன.
அத்துடன், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வேட்கையினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் அதற்காக குரல் எழுப்பி போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்நாட்டுச் சூழல் மிகப்பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.
தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒருவகையில் அரசியல் கைதிகளாகவும், உரிமைகளுக்காக போராடுவதில் இருந்து தடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாக வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் சிங்கள அரசின் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், இராஜதந்திரிகளும் இராணுவத் தளபதிகளும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசில் தீர்வு என்பது அவசியமற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டங்களிலும் பிரகடனம் செய்து வருகின்றனர்.
இவற்றினை எல்லாம் எதிர்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்று எடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டிய பெரும் கடமை புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.
3. நாடு கடந்த அரசாங்கத்திற்கும் (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கும் இடையில் (Government in Exile) வேறுபாடுகள் ஏதும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றா?
இரு அரசுகளுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் கோட்பாட்டு ரீதியில் வேறானவை.
புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டைவிட்டு தப்பி ஓடிவரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்து அமைக்கும் அரசாங்கமாகும். தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது புகலிட அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாகத் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டில் அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபடுவர்.
புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாடு முன்வர வேண்டும். புகலிட அரசாங்கம் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் நாட்டு விஷயங்களை மட்டுமே அது கணக்கில் கொள்ளும்.
ஆனால் நாடு கடந்த அரசாங்கம் புகலிட அரசாங்கத்தினைக் கடந்த ஒரு புதிய முறை. இது நாடு கடந்த வாழ்க்கை முறை (Transnational life) மற்றும் நாடு கடந்த அரசியலுடன் (Transnational Politics) தொடர்புபடுகிறது.
புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது வாழ்வினை அமைத்துக்கொள்ளும்போது தமது தாயகத்துடனும் தமது மக்கள் பரவிச் சிதறி வாழும் ஏனைய நாடுகளுடனும் எல்லைகள் கடந்த உறவைக் காத்து வருகின்றனர்.
இவர்களது வாழ்க்கை முறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையினை அமைத்துள்ளனர்.
ஈழத் தமிழரின் அரசியல் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது நாடு கடந்த அரசியலாக மாற்றம் கண்டுள்ளது. தற்போது நாம் பேசுகின்ற தேசியம் பன்முகப்பாடானதும் சமூக நலன்மிக்கதும் ஜனநாயக அடிப்படைகளில் கட்டி எழுப்பப்படுவதும் ஆகும்.
தற்போது அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்று எடுப்பதற்காக அமைக்கப்படுகிறது.
தமிழர் தேசத்தின் அரசியல் வேட்கைகளை மட்டும் அன்றி தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டினையும் இந்த நாடு கடந்த அரசாங்கம் தனது ஆளுகைக்குள் கொள்ளும்.
இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது அவசியமில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பொது அமைப்புக்கள் இந்த அரசாங்கத்தினத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களுடன் இருந்தவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உலக நாடுகளினதும் மக்களதும் ஆதரவினை இந்த அரசாங்கம் திரட்டும்.
4. நாடு கடந்த அரசாங்கம் உருவாகிவிட்டதா? இல்லை எனின் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் உள்ளோர் தான் இதனை உருவாக்கப் போகிறார்களா? நாடு கடந்த அரசினை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?
நாடு நடந்த அரசாங்கம் இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான செயற்குழு விசுவநாதன் ருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான ருத்திரகுமாரனின் பெயர் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு நடந்த அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் சார்ந்து உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை தற்போது இணைத்து வருகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமைச் செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்படும்.
விரைவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய செயற்குழுவின் விபரங்களை வெளிப்படுத்துவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு, அரசு உருவாக்க செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே.
இந்த நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களுடனும் தமிழ் மக்களுடனும் பேசி இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும்.
தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமது நாடுகளில் உள்ள சிவில் சமூகத்தின் (Civil Soceity) ஆதரவினையும் இந்த அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். தங்களது நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவினை இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு திரட்டும் வேலையில் இறங்கும். ஆலோசனைக் குழுவும் முஸ்லிம், இந்திய கல்விமான்களையும் உள்வாங்கி விரிவுபடுத்தப்படும்.
ஓவ்வொரு நாடுகளிலும் வாழும் ஈழத் தழிழ் மக்களின் வாக்காளர் பட்டியல் நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனத்தின் துணையுடன் தயாரிக்கப்படும். இந்த வாக்காளர் பட்டியல் துணையுடன் அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப சுதந்திரமான தேர்தல் குழு அமைக்கப்பட்டு, தேர்தல்கள் நடத்தி நாடு கடந்த அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இணைந்து இந்த அரசுக்கான சட்ட வரைவுகளை உருவாக்குவார்கள்.
5. நாடு கடந்த அரசாங்கத்துக்கான முயற்சியினை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்? நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் குடியுரிமைகளினைப் பெற்றவர்களுக்கு ஈழத்தின் அரசியல் விடுதலையில் உள்ள பங்கு என்ன?
நாடு கடந்த அரசியல் என்பது ஒரே நேரத்தில் பல தேசியங்களினைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கமுடியும்.
அதாவது, ஒருவர் ஒரே நேரத்தில் பிரிட்டிஷ்காரராகவும் தமிழராகவும் அல்லது கனடியராகவும் தமிழராகவும் இருக்கமுடியும். அதாவது இரட்டைக் குடியுரிமை. இது எங்கள் சமூகத்தின் பலமே தவிர பலவீனமல்ல.
இது ஈழத் தமிழர்களுக்கு வலுச் சேர்க்கின்ற விஷயமாகவே கொள்ளப்படவேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் யதார்த்தம் நாடு கடந்த அரசியலாகவே பரிணாமம் பெற்று வருகின்றது.
புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற ஐரிஷ் மக்கள், வட அயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கு உறுதியான வெளிப்படையான ஆதரவினை வழங்கினார்கள்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்த நாள் வரையும் இஸ்ரேல் தேசத்தினை அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு தளத்தில் இத்தாலி, எல்சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மால்டோவா போன்ற பல நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினை தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக அங்கமாக மாற்றிவிட்டன.
இத்தாலிய நாடாளுமன்றத்துக்கு நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களிடமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் ஹெய்ட்டி மக்களுக்காக ஒரு தனித் தேர்தல் தொகுதியே அந்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்திற்கு சான்று பகல்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களின் நாடு கடந்த அரசுக்கான முயற்சியினையும் நோக்கவேண்டும்.
இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கு பிரதேங்களினை தமது பாரம்பரியத் தாயகமாக கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினதும் தொடர்ச்சியான தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாக தாயகத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டனர்.
தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்திப் புறக்கணிப்புக்களும் இராணுவத்தின் துணைகொண்டு நிகழ்த்தப்பட்ட இன வன்செயல்களும் காரணமாக ஒருபகுதி மக்கள் வட கிழக்குக்கு வெளியே வாழ வழி தேடி குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மற்றுமொரு பகுதியினர் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை வன்செயல்களில் இருந்த தங்களின் உயிரினைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தீவிற்கு வெளியே அகதிகளாக புலம்பெயர்ந்து குடிபெயர்ந்தனர்.
எஞ்சியிருந்தோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளூரில் அகதிகளாகவும், பொருளியல் வலுவற்ற அநாதைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும், சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற ஈழத் தமிழர்களில் ஏறத்தாழ 90 சதவீதமானோர் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் குடியரசு அரசியல் அமைப்பின் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தேசத்தினுள் வசிக்க முடியாமல் தமது சொந்த விருப்பத்திற்கு மாறாக வெளியேறியவர்கள்.
எனவே தாயக விடுதலை தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் போராடுவதற்கும் தாங்கள் தாயகத்தினை விட்டு வெளியேற்றப்படக் காரணமான காரணிகளினை உடைத்து எறிந்து செயற்படுவதற்கும் இவர்களே உரிமையுடையவர்கள்.
தாயகத்தில் ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்கான பணிகளினை முன்னெடுப்பது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் உரிமையும் கடமையும் ஆகும்.
6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எங்கே அமையும்? அத்தகைய அரசாங்கத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஓர் புதிய அரசியல் முயற்சி.
இலங்கைத் தீவுக்கு வெளியே புலம்பெயர்க்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களில் ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளின் குடியுரிமைகளினைப் பெற்றும் பெறாமலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் தேசங்களின் எல்லைகளினையும் தாண்டியதாக தங்களுக்குள் ஒரு ஈழத் தமிழ்த் தேசிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதும் தங்களது தாயகத்தின் அரசியல் விடுதலைக்கான வேட்கை கொண்டவர்களாக செயற்படுவதும் தொடர்ச்சியாக தாய்த் தேசத்தில் வாழும் உறவுகளுடனும் சமூகங்களுடனும் இறுக்கமான தொடர்புகளைப் பராமரிப்பதும் இங்கு முக்கியமானது.
அமைக்கப்பட இருக்கும் தமிழீழ அரசாங்கம் மற்ற வழக்கமான அரசுகள் போல் ஒரு தேசத்தின் நிலப்பரப்பினை தளமாக கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி விதித்தல் போன்ற பாரம்பரிய அரசு செயற்பாடுகளினால் தனது இறையாண்மையினை நிலைநாட்ட முற்படுவதாகவோ இருக்காது.
ஆகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி செயற்படுத்த ஒரு நிலப்பரப்போ தேசமோ அவசியமில்லை.
தாயகத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு, முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருளாதார பண்பாட்டு செழுமை ஆகியவற்றினை தனது முதன்மைக் குறிக்கோளாக கொண்டு இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படும்.
மேலும், புலம்பெயர் தேசங்களில் குடியேறிய ஈழத் தமிழர்கள், தாங்கள் வாழும் தேசங்களின் சட்டமுறைமைகளுக்கு இசைவாக தங்களினை ஒரு பலம் பொருந்திய சமூகமாக கட்டி எழுப்பவதற்கும் அதன் ஊடாக அந்தத் தேசங்களில் அவர்களால் அடையப்படக்கூடிய சமூக பொருளாதார அரசியல் மேனிலையினை தாயக விடுதலைக்கான உந்துசக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இந்த அரசு முன்னெடுக்கும்.
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மொழியினையும் தமிழ்ப் பண்பாட்டினை தமது வாழ்வாகக் கொண்ட எம்மவர்களின் சமூக பொருளாதார செழுமைக்கான ஆதரவுத் தளமாகவும் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஈழத் தமிழரின் தாயக விடுதலைக்காக ஒருங்கிணைக்கும் அடித்தளமாகவும் இந்த அரசு செயல்படும்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினை தனது ஆட்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களினை நிறைவேற்றுவதற்கான செயலணிகளினையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களினையும் பொருத்தமான முறையில் பல்வேறு தேசங்களில் அவற்றின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு உருவாக்கிச் செயற்படுத்தும்.
7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்குமா? அவைகளின் அங்கீகாரம் இன்றி இந்த செயல் திட்டத்தினை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?
இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது தேசத்துக்கு வெளியே புகலிட அரசாங்கங்களினை உருவாக்கி செயற்படுத்தி இருந்தனர்.
பல சந்தர்ப்பங்களில் உள்நாடுகளில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக தலைவர்கள் நாட்டுக்கு வெளியே தங்களது அரசாங்கங்களினை நகர்த்தி செயற்படுத்தியதும் பின்பு சுமூகமான சூழ்நிலையில் அந்த அரசுகளினை தேசத்தினுள் கொண்டு சென்று தொடர்ந்ததும் உண்டு.
அத்தகைய நிலைமைகளில் ஒரு தேசத்தின் ஆதரவும் அங்கீகாரமும் அத்தகைய புகலிட அரசாங்கங்களின் இருப்புக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கும் அவசியமானது.
முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு அத்தகைய தன்மைகளுக்கு உட்பட்டதல்ல. புகலிட அரசாங்கங்கள் இயங்குவதற்கு பலமான புலம்பெயர் சமூகம் அவசியமானதாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் பலமான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு.
8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய எண்ணக்கருவினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வேலைத்திட்டமாக கொள்ள முடியுமா?
ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு கட்டங்கள், அணுகுமுறை மாற்றங்களைத் தாண்டி வந்துள்ளது.
இந்தக் காலகட்டத்திற்குள் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைத்துவங்களும் மாற்றம் பெற்றுள்ளன. இது வரலாற்றின் இயங்கியல் தன்மைக்கேற்ற மாற்றம்தான்.
1980-களின் பிற் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம், இலங்கை மற்றும் அதன் நேச சக்திகளின் கூர்மைப்படுத்தப்பட்ட இராணுவ மேலாதிக்கத்தினால் பலவீனமாக்கப்பட்டது. இங்கு பலவீனமாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டம் அல்ல.
‘செப்டம்பர் 11′ என குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கருத்துருவாக்கத்தினை மிக வெற்றிகரமாக கையாண்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு போரினை ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் தாயகத்தின் மீதும் திணித்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக்கடமை தமிழ் மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான பங்களிப்பினை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் முன்வைத்தார்.
இன்றைய சூழலில் மேல் எழும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்குள் அனைத்து நாடுகளின் நலன்சார் அரசியல் வலைப் பின்னல்களுக்கு ஊடாக – பொருத்தமான புதிய அணுகுமுறைகளினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கருத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனை தமிழ்ச் சமூகத்திடம் கையளித்ததன் மூலம் வரலாற்றின் இயங்கியல் போக்கில் தமக்குரிய கடமையினைச் செய்துள்ளனர்.
அதனைப் புரிந்துகொண்டு ஒரு தனித்துவமானதும் பொதுமைத்தன்மை கொண்டதும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஈர்க்கக் கூடியதுமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்.
இது மேல் இருந்து திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்காது. முற்றாக கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கும்.
இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் சிறப்பாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும். ஜனநாயகச் செயல்முறை ஊடாக பல தேசங்களிலும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளினைக் கொண்டு செயற்படுத்தப்படும்.
இந்த அரசாங்கம் செயற்படவுள்ள முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை நாம் விரைவில் வெளியிடவுள்ளோம்.

9. இலங்கை அரசும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் இதனை எவ்வாறு நோக்குவார்கள்?
இலங்கை அரசும் அதன் இனவெறி ஆட்சியாளர்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ வேலைத்திட்டத்தினை மிகவும் அச்ச உணர்வுடனும் ஆபத்தானதாகவுமே பார்க்கின்றனர்.
ஏனெனில் இலங்கை அரசு தற்போது தாயகத் தமிழர்களின் மேலும் தாயகத்தின் மீதும் கொண்டுள்ள மேலாண்மை உண்மையான வெற்றியும் அல்ல. நிரந்தரமானதும் அல்ல. தாங்கள் கட்டி எழுப்பிய இராணுவ மேலாதிக்கத்தினால் அவர்கள் பெற்றுக்கொண்டது வலுச் சமனிலை மேலாதிக்கம் மட்டுமே. அதுவும் இலங்கைத் தீவுக்குள் மட்டுமே சாத்தியமானது.
அத்துடன், ஆயுதப் போராட்ட அணுகுமுறைக்கு மட்டுமே அவர்களின் இராணுவ மேலாதிக்கத்தினால் பதிலளிக்க முடியும்.
இத்தகைய நிலைமையில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஆயுதப் போர்முறைக்குப் புறம்பாக அனைத்துலக தளத்தில் கட்டி எழுப்பப்படுவதனை இலங்கை ஆட்சியாளர்கள் தங்களால் எதிர்கொள்ள முடியாத விஷயமாகவே அச்சத்துடன் பார்க்கின்றனர்.
எனவே தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வேலைத் திட்டத்தினை வளரவிட்டால் அது தங்களால் என்றுமே வெற்றி கொள்ளப்படமுடியாத பலம் கொண்ட ஈழத் தமிழரின் போராட்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர்.
இன்று இலங்கையும் அதன் துனை சக்திகளும் தங்களின் வளர்ச்சியின் எல்லைக்குப் போய்விட்டனர். கடந்த கால அணுகுமுறைகளினை மீளவும் செயற்படுத்துவதனைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.
இலங்கை தான் வெற்றி பெறக்கூடிய களத்திற்குள் ஈழத் தமிழரின் போராட்ட வடிவத்தினையும் மட்டுப்படுத்தவே முயற்சிக்கின்றது. களத்தின் விளையாட்டு விதிகளினை தீர்மானிக்கும் கட்டுப்பாட்டினை தனக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது.
முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடு ஈழத் தமிழர்களினால் திறக்கப்படும் புதிய ஆடுகளமாகும். இதன் விதிகளினை இலங்கையால் தீர்மானிக்க முடியாது. அதன் இராணுவ மேலாதிக்கமும் படைக் கட்டுப்பாடும் இங்கு செல்லுபடியாகாது. முடிந்தால் சில உதிரியான தனிமனித அச்சுறுத்தல்களினை மட்டுமே இலங்கையின் ஆட்சியாளர்களினாலும் அதன் துணைச் சக்திகளினாலும் ஏற்படுத்தமுடியும்.
10. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தற்போது இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அமைப்புக்களினைப் போன்ற ஒன்றுதானா? அல்லது தனித்துவம் கொண்டதா? அவ்வாறு தனித்துவம் கொண்டதாயின் அது எவ்வாறு தற்போது இயங்குகின்ற நிறுவனங்களுடனும் கட்டமைப்புக்களுடனும் உறவுகளினைப் பேணும்?
நடைமுறையில் பல்வேறு சமூக நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அவை செயல்பாட்டளவிலும் பங்கேற்பாளர்களினைப் பொறுத்தும் தமக்குள் ஒத்த தன்மைகளினையும் தனித்தன்மைகளினையும் கொண்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்துவத்தினையும் செயற்படு ஆற்றலினையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
எனினும் தற்போது தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான சவால்களினை எதிர்கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவசியமானது.
முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் சவால்களினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஈழத் தமிழ்மக்கள் சார்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களின் மக்கள் ஆணைபெற்ற அதி உயர் அரசியல் பீடமாக அனைத்துலக மட்டத்தில் அமைக்கப்படும்.
புலம்பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக நடைமுறை ஊடாக மக்கள் நேரடியாக தமது வாக்குகளினைப் பிரயோகித்து பிரதிநிதிகளினைத் தெரிவு செய்வர்.
அந்தப் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடி அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்பட்டு எதிர்கால செயற்பாடுகளுக்கான சட்டகத்தினை உருவாக்குவர்.
அவ்வாறு அவர்கள் செயற்படும்போதும் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானமும் 1977 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் அதற்கு வழங்கிய மக்கள் ஆணையும் 1985 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய திம்புக் கோட்பாடுகளும் அடிப்படை நெறிப்படுத்தல் நியமங்களாக அமையும்.
இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான பிரதிநிதிகளினை நேரடியாக தெரிவு செய்வதன் மூலம் தான் மக்கள் ஆணையினை பெற்றுள்ளதனை உலகுக்கு பிரகடனப்படுத்தும் அதேவேளை ஒவ்வோர் தேசங்களிலும் செயற்படும் மக்கள் சார்ந்த கட்டமைப்புக்களினை தன்னுடன் ஒன்றிணைப்பதன் ஊடாக வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் தனது செயற்றிட்டங்களினை கையாள்வதற்கான வலையமைப்பினையும் பங்காளி உரித்தாண்மையினையும் கட்டி எழுப்பும்.
இவ்வாறு மக்கள் ஆணை கொண்ட, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல் பீடமாகத் தன்னை நிலைநிறுத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களைத் தன்னுடன் இணைத்துப் பணியாற்றும். இந்த இணைவு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களினை நாம் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
இந்தக் கலந்துரையால்களுக்கு ஊடாக பொருத்தமான இணைவு வடிவம் கண்டறியப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
11. நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் தீர்மானங்களும் செயற்பாடுகளும் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் அரசியல், சமூகம், பொருண்மியம், பாதுகாப்பு, புனர்வாழ்வு – புனரமைப்பு – மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் எத்தகைய சாதக பாதகவிளைவுகளினை ஏற்படுத்தும்?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதன்மையான குறிக்கோளாக ஈழத் தமிழரின் தன்னாட்சிக்கான போராட்டத்தினை கொண்டிருக்கும். அதேவேளையில் இரட்டை முனைகளினைக் கொண்ட அணுகுமுறையினை முன்னெடுக்கும்.
ஒன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் அங்கு வாழும் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளினையும் புறக்கணிப்புக்களினையும் பழிவாங்கல்களினையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய மாற்று முயற்சிகளினை அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்தல்.
மற்றது புலம்பெயர் தமிழர்களின் ஆற்றல்களினையும் வளங்களினையும் ஒன்று திரட்டி வழிப்படுத்துவதன் மூலம் தாயகத்தின் வளங்களினையும் வாய்ப்புக்களினையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சூறையாடுவதனையும் உரித்துக்கொண்டாடுவதனையும் தடுத்து நிறுத்தி தமிழர்பால் தக்கவைத்தல்.
இங்கு குறிப்பிட்ட நோக்கங்களினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகவும் இலங்கைத் தீவிற்குள் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் உள்ளூர் வளங்கள் மீது அவர்களுக்குள்ள உரிமையினைத் தக்கவைப்பதற்காகவுமான பொருத்தமான மாற்று ஒழுங்குகளினையும் உப நிறுவனங்களினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டறிந்து உருவாக்கி நெறிப்படுத்தும், அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்களினை பொருத்தமான முறையில் உள்வாங்கும்.
தேவையான நிலைமைகளில் அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புக்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறவுகளினை ஏற்படுத்தி தாயகத்தின் நல்லாட்சி, மீள்குடியேற்றம், அபிவிருத்தியும் முதலீடும், நிறுவனமயமாக்கம், மனிதவள மேம்பாடு, சூழல் நல்லாட்சி என்பவை தொடர்பாக விவாதித்து அவர்களின் பங்களிப்பினை தமிழ் மக்களின் முழுமையான நிறைவுக்காக வழிப்படுத்தும்.
இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் தேசியத்துடன் இணைந்த அரசியல் குறிக்கோள்களுக்காக செயற்படும் அமைப்புக்களுக்கு பொருத்தமான உள்ளீடுகளினை வழங்குவதன் ஊடாக அவர்களினை வலுவூட்டி அவர்களின் செயற்பாடுகளினை முன்நோக்கி நகர்த்தும்.
12. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய தலைமைத்துவத்தினை வழங்கும்? நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைத்துவம் அவர்களுக்கு தேவைதானா? அவர்கள் தற்போது அடைந்துள்ள சமூக பொருளாதார மேனிலை போதாதா?
மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்ட நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர் சமூகங்களினை ஒப்புநோக்கும்போது ஈழத் தமிழர்கள் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றார்கள். அவர்களது கடின உழைப்பும், கல்வி அறிவும், தொழிலாற்றலும், நிறுவன விசுவாசமும் கீழ்ப்படிதலும் சிக்கனமான வாழ்க்கை முறையும் சொத்து உடமையும், கூட்டு வாழ்க்கையும் தாயக உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது.
எனினும் போரினாலும் இன வன்செயல்களினாலும் சிதைக்கப்பட்டு தேசத்தில் இருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு குறிப்பாக விடுதலைக்காக போராடும் இனத்திற்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.
அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன வன்செயல்களாலும் பொருளாதார புறக்கணிப்புக்களாலும் மீண்டும் மீண்டும் தறிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் தனது சுய ஆற்றல்களினாலேயே மீளவும் முளைவிட்டு எழுந்தது. ஆனாலும் இந்த சமூகம் தனது வளர்ச்சியினை ஒரு வரையறைக்குள் முடக்கிக்கொண்டுள்ளதாகவே அவதானிக்கப்படுகின்றது.
கல்வியறிவில் ஒப்பீட்டளவில் உயர் வீதத்தினை கொண்டிருந்தாலும் இந்த சமூகம் உயர் தீர்மானம் எடுக்கும் கட்டளைப் பீடங்களில் பெற்றிருக்கக்கூடிய பங்கு மிகமிக குறைவாகவே உள்ளது.
அதேபோன்று கூடிய சேமிப்பு ஆற்றலினைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகம் தொழிற்பாடு மூலதன உருவாக்கத்தில் மிகப்பலவீனமாகவே காணப்படுகின்றது.
தொழில் வினையாற்றலில் சிறப்பு தன்மைகளினைக் கொண்டிருந்தும் தொழிலாண்மையிலும் தொழில் வாய்ப்புக்களினை உருவாக்குவதிலும் போதிய அக்கறையற்ற நிலைமையே அவதானிக்கப்படுகின்றது.
இன வன்செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட உயிர் ஆபத்துக்களினையும் அபாயங்களினையும் துணிகரமாக எதிர்கொண்டு தம்மை தக்கவைத்துள்ள ஈழத் தமிழர்கள், திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை எதிர்கொள்வதற்கு முன்வரத் தயங்குபவர்களாகவே உள்ளனர்.
போரின்போது இழக்கப்பட்ட வாய்ப்புக்களினை மீளவும் விரைவாக கட்டி எழுப்புவதற்கு உரிய வங்கிகள், மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றினைக் கூட சொந்தமாக கட்டி எழுப்ப முன்வராமல் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தின் கீழான கட்டமைப்புக்களிலே தங்கி வாழும் சமூகமாக உள்ளனர். இவைகள் யாவும் மாற்றப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களின் மேனிலை என்பது அனைத்துலகத்தின் சகல பரப்புக்களிலும் கட்டி எழுப்பப்பட வேண்டும் வாழும் தேசங்களின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியளவான மூலதனவாக்கத்திலும் தொழிலாண்மையிலும் ஈழத் தமிழர்களின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும்.
தேசங்களின் தீர்மானம் எடுக்கும் உயர்கட்டளைப் பீடங்களின் தவிர்க்கமுடியாத அங்கமாக ஈழத் தமிழர்களின் அறிவாற்றலும் நிபுணத்துவமும் விரிவுபடுத்தப்படவேண்டும். அனைத்துலக நிறுவனங்களின் உயர்பீடங்களில் ஈழத் தமிழர்களின் ஆளுமை பிரதிபலிக்கவேண்டும். அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பயணம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் விரைவுபடுத்தப்பட்டதாகவும் அமையும்.
இதற்கு தேவையான மூலோபாய – தந்திரோபாய ரீதியான தலைமைத்துவத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான பணிகள் எந்தளவில் உள்ளன? அரசாங்கத்தின் வடிவமும் ஏனைய விடயங்களும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டு விட்டனவா? உத்தேசிக்கப்பட்ட கால அட்டவணைகள் தாயகத்தின் மனிதநேய நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது காலநீட்டம் கொண்டவையாக கருதமுடியாதா?
‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற செயல் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாகும். அதேவேளையில் அதுபற்றிய போதிய கலந்துரையாடல்களினையும் விவாதங்களினையும் மக்கள் மத்தியிலும் பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மத்தியிலும் உருவாக்காமல் இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பது இந்த முயற்சியின் அடிப்படைகளினையே மறுப்பதாக அமையும்.
தேசத்தில் நிலவும் மனிதநேய அவலங்கள் தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய தேவை உணரப்பட்டாலும் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைக்கான புலம்பெயர் சமூகத்தின் அதி உயர்பீடத்தினை உருவாக்குவதில் நியாயமான கால அவகாசம் கொண்டிருப்பது மிக முக்கியமானது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விவாதங்களாகவே அமைந்துள்ளன.
இந்த விவாதங்கள் ஊடாக ஓரளவுக்கு சிறப்பான முடிவுகளினை உருவாக்கக்கூடிய ஆலோசனைகள் கிடைத்துள்ளன.
இந்த ஆலோசனைகள் யாவற்றையும் கவனத்தில் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான உருவாக்க குழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் திட்ட விபரங்கள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலுவைப் படிமுறை கீழே தரப்படுகிறது.
1 ஆம் நிலை: கருத்துருவாக்கம்.
2 ஆம் நிலை: நிபுணத்துவ ஆலோசனைக் குழுவினை அமைத்தல்.
3 ஆம் நிலை: பரந்த தளத்தில் நாடுகள் தழுவியதாக கலந்துரையாடல்களினை உருவாக்குதலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான குழுவினை நாடுகள் சார்ந்ததாக தெரிவு செய்தலும்.
4 ஆம் நிலை: முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படை வடிவத்தினை வரையறை செய்தலும் பிரதிநிதிகளினை தெரிவு செய்வதற்கான தேர்தல் செயன்முறையினை வடிவமைத்து முன்னெடுத்தலும்.
5 ஆம் நிலை: தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்டதான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையினை கூட்டுதலும் யாப்பினை உருவாக்கி அங்கீகரித்தலும் அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் கட்டளைப் பீடத்தினை அங்குரார்ப்பணம் செய்தலும்.
6 ஆம் நிலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை செயற்பாட்டுக்கு கொண்டு வருதல்.
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் தற்போது 3 ஆம் நிலைச் செயற்பாடுகள் தொடர்கின்றன.
14. நாடு கடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் எப்போது நடைபெறும்?
தமிழர் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேர்தல்களை ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பதற்கு தற்போது திட்டமிடப்படுகிறது.
இது குறித்த மேலதிக தகவல்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.
15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான தகுதிகள் எவை? எவ்வாறு இணைவது?
இந்தக் குழுவில் இணைய விரும்புவர்கள் 18 வயதினை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.
இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
ஓவ்வொரு நாடுகளுக்கும் குழுக்களுக்கு தலைமை தாங்குபவர் பெயரினையும் அவரது தொடர்பு விபரங்களையும் விரைவில் அறியத் தருவோம்.
அவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளலாம். இதனை விட எங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் மூலமும் தொடர்பு கொண்டும் இணைந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

1 comment:

Anonymous said...

தமிழிழ அரசு நல்லதா? கெட்டதா?
எது சரியென்கின்றீர்கள் நீங்கள்.
ரமணிதரன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter