Thursday, May 13, 2010

குமுதினிப்படகின் கோரப்படுகொலைகள் 25 வது ஆண்டு!!

குமுதினிப்படகின் கோரப்படுகொலைகளின்
25 வது வருட நினைவறா நாள்!!

சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 25 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை உலகம் கண்டும்,கண்டுகொள்ளாததைப் போல்மௌனித்திருக்கிறது. குமுதினிப்படகின் கொடுமை நடந்து சரியாக 24 ஆண்டுகளுக்குப் பின்னால் அதே மே மாதத்தில் ஒட்டுமொத்த வன்னித் தமிழினமும் பிய்த்தெறியப்பட்டு உயிரோடு எரித்தும், உயிரோடு மண்ணுள் புதைத்தும், எஞ்சியவர்கள் நடைப்பிணங்களாகவும் ஆக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடிய வலிகளைத் இன்னமும் தாங்கி,மனதை விட்டகலாத் துயரோடு அந்த மண்ணின் மலர்களுக்கு கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.

இன்றைக்குப் போலிருக்கிறது அந்த அனர்த்தம்.
25 ஆண்டுகழிந்து விட்டது என்பதை நம்ப மறுக்கிறது மனம்.
கடல் வெளியில் பிணந்தின்னிப் பேய்களினால் அனாதரவாய்க் கிள்ளியெறிந்த எம் ஊரின் உறவுகளுக்கு எம் கண்ணீரைக் காணிக்கையாக்கத் துடிக்கின்றோம்.
எம்மிடமிருக்கும் கடைசிச்சொட்டுக் கண்ணீராலும்,
உங்கள் காலடியை நனைக்கத் துடிக்கின்றோம்.
இன்னமும்
மானிட இருத்தலை மறுதலித்தெறிந்து
சுடுகாடாய்க்கிடக்கிறது இத் தேசம்.
திரும்பும் திசையெங்கும் மரண வலி.
ஊருக்காய் உயிர் கொடுத்த உத்தமர்களே,
உங்களை எங்கள் மனதினுள் பத்திரப்படுத்துகின்றோம்.
இதைத் தவிர உங்களுக்கு உறுதியாகச் சொல்லவல்ல
வார்த்தைகள் எதுவும் இன்று எம்மிடம் இல்லை..
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இறுமாப்போடு தனித்த தமிழ்த் துண்டாய் நீண்டு கிடக்கும் நிலம் தான் நெடுந்தீவு. ஒல்லாந்தியரும், போர்த்துக்கேயரும், பிரித்தானியருமாய் நெருக்கிப் போட்ட நெருக்குவாரப் பிடிகளிலிருந்தெல்லாம் தப்பித்து தனித்துவமாய் நிலைத்து நிற்பது நெடுந்தீவு. இந்துமாக் கடலினுள் செருக்கோடு நீட்டி நிமிர்ந்து கிடக்கிற இந்த நெடுந்தீவைப் பட்டணத்தோடு இணைப்பதற்கான பாலமாகத் திகழ்வன படகுகள்தான். இவ்வாறான படகுகளின் வரிசையில் குமுதினியும் ஒன்று. இந்தப்படகினைத்தான் 25 வருடங்களுக்கு முன்னர் அரச கூலிப்படைகள் நட்டநடுக் கடலில் வைத்துத் துவம்சம் செய்தார்கள்.
குமுதினிக் கோரக்கொலைகளின் கடைசிச் சாட்சியமாயும்,சத்தியமாயும் ஓடிஓடிக் களைத்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம். குமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் அவர்.அந்த வாக்குமூலங்களால் இத்தனைகாலமாக அரச படைகளால் துரத்தப்பட்டு தலைமறைவாயிருந்தவர். தன் அன்பு மனைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவர் இப்போ இலண்டனில் அகதியாகியுள்ளார். ஈழநேசனுக்காக அவரிடம் தொடர்பு கொண்டபோது, ‘குமுதினிப் படுகொலை யென்பது ஒரு தனிமனிதப் படுகொலையல்ல. அது ஒரு ஊரின் மரணம். அது ஒரு இனத்தின் மரணம் பூவும் பிஞ்சும் காயுமாய் குதறியெறிந்த ஒரு நந்தவனத்தின் முற்றுப் புள்ளி. பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல் குதறித் தின்ற கொடிய பேய்களின் கோரத்தாண்டவம்.
நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. நியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது. பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்ற நம்பிக்கை கூட அரசப் பேய்களின் வன்னி வெறியாட்டத்திற்குப் பிறகு வற்றிப் போய்விட்டது.என்றார் அவர். நெடுந்தீவிலிருந்து அன்று புறப்பட்ட குமுதினியை கடல் பேய்களிடமிருந்து தப்பித்து வைப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.அப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது. இயலாமையோடு, அந்த அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் மட்டுமே எழுப்பினர். ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின. கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.அப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடிப் பெருமையுடன் சூட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது. பெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள்,கணவன் முன்னால் மனைவி எனத் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர். குமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று எவருக்கும் தெரியாது போயிற்று. புத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணத்தில் 7 மாதப் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ....? என்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் முதல் 70 வயது தெய்வானையம்மை ஆகியோரோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர். கசப்பான அந்த அனுபவப் பதிவில் என்னப்போல் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகம் இதனைக் கொடுரங்களாக நோக்காது வெறும் காட்சிப்படங்களாகப் பார்த்து மகிழ்ந்தது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த ஒட்டுமொத்த அவலமாகக் கடந்த வருடமும் அமைந்து போனது.. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் குமுதினியின் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.... ஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது. உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா....? நீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா...? கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா...? 25 ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி தினமும் ஓடிகொண்டிருந்த குமுதினி 25 ஆண்டு கடந்து இன்றும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த காட்சிக்கு சாட்சியாக ஓடிக்களைக்கிறது. 25 வது ஆண்டு குமுதினிப் படகு படுகொலையின் நினைவு நாள் மே 15 ந் திகதியாகும். அன்றைய நாளில் இலண்டனிலுள்ள நெடுந்தீவிற்கான சம்மேளனங்கள் மாபெரும் நினைவெழுச்சி நிகழ்வொன்றினை அங்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அன்றைய தினம் மாலை 6 மணியளவில் இலண்டன் என்பில் நாகபூசணி அம்மன் ஆலயத்தில்(எட்மண்டன்) விசேட வழிபாடுகளும் நினைவுப் பேருரைகளும் இடம் பெறவுள்ளது.


"துவம்சம்" அல்லது நினைவறா நாள்.
( 15-05-1985 )



குமுதினி .........
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் - என்
இனிய தீவினை ........
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!
அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்.......
ஓலையும், ஒடியலும் .........
பண நோட்டுக்களாக மாறின !!
பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த - பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!
ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்........
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
"மனிதமே, நேயமென்று"
தன் மடிமீது சுமந்து ......
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !


பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !
என் கையில் சுமந்த புத்தகங்கள் .....
காலில் நசிபடும் செருப்பு ........
தீபாவளிப் புத்தாடை .....
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை .......
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் .......
எல்லாமே ...... எல்லாமே ..........
அவள் சுமந்தவை !
கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் - என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !
புள்ளிமானாய் துள்ளிக் குதித்து - அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது .......
மலைபோல் உயரும் அலைகளும் - அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!
அதிகாலையின் பனிச்சிதறலோடு ......
அன்றும் அவள் - தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!
பிரளயம் என்பதை அறியா - அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ..........
காலறுபட்டு ........கையறுபட்டு ........
துடிக்கத் துடிக்க .........
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி .......
இன்னமும் ....... அவர்கள் ........
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி .......
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ........
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ........
பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி .....
மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ......
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி .......
எவரைப்பற்றி .......
எவரைப்பற்றி ........
நான் புலம்பி அழ ?????
வெல்லை, பெருந்துறை .......
குடவிலி, குவிந்தா .......
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!
கீழ்த்திசையிருந்து ........
பெருந்துறையீறாய்.........
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.
என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!
வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !
பூதத்தைக் கொண்டு பொழிந்த - கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த - மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .
இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் .......
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி - கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??
ஈழதேசத்து மூளையாய்த் திகழும் - அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ........
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் - இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து .....
அலைகடலின் மடியிருந்து ......
வெட்டத் தளைக்கும் மரங்களாய் .....-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!
"மா.சித்திவினாயகம்"
("மாவிலி" மலரிலிருந்து )

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter